செவ்வாய், 26 மார்ச், 2013

நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி?

நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி?

மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றிகரமான முடிவுகளை எதிர்பார்க்கும் ஒரு சிறந்த அணுகுமுறையே நேர்மறை எண்ணங்கள் (positive thinking) எனப்படுகிறது.

எல்லோரும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறோமா என்றால் பலரிடம் பதிலிருக்காது. வாழ்க்கையில் பல பேர் பத்து சதவிகிதமாவது எதிர்மறை எண்ணங்களை (negative thinking) கொண்டிருப்பர். 

எதிர்மறை எண்ணங்களை தொடர்ந்து வளர்த்துக் கொள்பவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திணறுவர். ஆனால் நேர்மறை எண்ணங்கள் நம்பிக்கையை ஆதாரமாக பயன்படுத்தி மன அழுத்தத்தை போக்க பேருதவி புரிகிறது.

நேர்மறை எண்ணங்களால் பல நல்ல விஷயங்கள் ஒருவரது வாழ்வில் நடைபெறுகின்றன. நேர்மறை எண்ணங்களால் ஆயுள் காலம் அதிகரிக்கிறது. மன அழுத்தம் குறைகிறது. துன்பங்களை தாங்கும் உந்துசக்தி கிடைக்கிறது. நல்வாழ்வு அமைகிறது.

இதயநோயினால் ஏற்படும் இறப்பு ஆபத்து குறைகிறது. கஷ்டமான காலங்களில் கஷ்டங்களை தாங்கி, மன அழுத்தத்தை சமாளிக்கும் திறனை அளிக்கிறது.

இப்படி நேர்மறை எண்ணங்களை பற்றி பல சிறந்த விஷயங்களை கூறிக்கொண்டே போகலாம். இனி எவ்வாறெல்லாம் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு வாழ்வில் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

1. நகைச்சுவை உணர்வை வெளிக்கொண்டு வரவும்:

தினசரி நிகழ்வுகளில் ஒரு நகைச்சுவையான விஷயத்தை நாட வேண்டும். வாழ்க்கையில் சிரிக்க முடிந்த அளவில் சிரித்தால், குறைந்த மன அழுத்தத்தை உணர்வோம்.

2. நேர்மறை எண்ணங்களை கொண்ட மனிதர்களை அமைத்துக் கொள்ள வேண்டும்:

வாழ்க்கையில் வரும் மனிதர்கள் நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு ஆதரவாக நல்ல பல அறிவுரைகளை தந்து, உங்களது கருத்துக்களை காது கொடுத்து பொறுமையுடன் கேட்பவராக இருப்பவர்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும். இதனால் அவர்கள் மூலம் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள முடியும்.

ஆனால் எதிர்மறை எண்ணங்களை உடையவர்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டால், அவர்கள் மூலம் மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பை பெறுவீர்கள். இதனால் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடும்.

3. சுய சிந்தனை மூலம் நேர்மறை எண்ணங்களை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்:

நேர்மறை எண்ணங்களை சிந்திக்க சில வழிகளை பின்பற்றலாம். உதாரணத்திற்கு ‘இதற்கு முன் நான் இந்த செயலை செய்ததே இல்லை' என்று ஒரு விஷயத்தை யோசிப்பதை விட, ‘புதிதாக ஒரு விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது' என்று நேர்மறையாக சிந்திக்க வேண்டும்.

அதேபோல் ‘இந்த செயலை செய்ய மிகவும் கடினமாக இருக்கிறது' என்று எண்ணாமல், நேர்மறையாக ‘நான் வேறொரு கோணத்தில் இதை அணுகி சமாளிப்பேன்' என்று சிந்திக்க வேண்டும். இப்படி எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

4. மற்றவர்களுக்கு உதவலாம்:

மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், அதிலிருந்து விடுபட மற்றொரு நபருக்கு ஏதாவது நன்மை செய்ய முயற்சி செய்யலாம். இவ்வாறு செய்யும் போது உங்களது தவறான எண்ணங்களிலிருந்து கவனத்தை வேறு நல்ல விஷயத்தில் திசை திருப்ப முடியும். மற்றவருக்கு செய்யும் நன்மைகளால் மனத்திருப்தியும் ஏற்படும். இதனால் நல்ல எண்ணங்கள் மனதில் உருவாக ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

5. நேர்மறையான மேற்கோள்களை படிக்கவும்:

நேர்மறையான மேற்கோள்களை உங்களது கணிணியில், பிரிட்ஜ் கதவுகளில் மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடியில் காகிதத்தில் எழுதி ஒட்டி வைக்கலாம். இதனால் ஒவ்வொரு முறையும் இவற்றை பார்க்கும் போது அவற்றை படித்து நல்ல எண்ணங்களை மனதில் விதைக்கலாம்.

6. தியானம் செய்யவும்:

மனதை அமைதிப்படுத்தி நல்ல எண்ணங்களை உருவாக்குவதில் தியான முறையை பின்பற்றலாம். அதற்கு அமைதியாக கண்களை மூடிக் கொண்டு ஒரு மணி நேரம் எந்த கவலை தரும் விஷங்களை பற்றி சிந்திக்காமல் ஒரே விஷயத்தை நேர்மறையாக சிந்திக்க வேண்டும். ஆரம்பத்தில் இது கடினமாக இருக்கும். ஆனால் தொடர்ந்து செய்து வர நேர்மறையான எண்ணங்களால் மனம் சூழப்பட்டு எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையில் வாழலாம்.

செவ்வாய், 19 மார்ச், 2013

எத்தனை அதிர்ஷ்டக்காரர் நீங்கள்?


எத்தனை அதிர்ஷ்டக்காரர் நீங்கள்?

"நல்லதே பார், நல்லதே நினை, எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்” என்று நம்பியது மட்டுமல்லாமல் அனைவருக்கும் அதை உபதேசிப்பவர் அந்த அறிஞர். இறைவன் தந்திருக்கும் நன்மைகளை சிந்திக்கவும், அவற்றிற்காக நன்றியுடன் இருக்கவும் தன் பிரசாரங்களில் கூறுவார் அவர். இருப்பவற்றிற்காக நன்றியுடன் இருந்தால் மட்டுமே மேலும் நன்மைகள் நம்மிடம் வந்து சேரும் என்று அவர் உறுதியாகச் சொல்வார்.

“ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நடுவே ஒரு கோடு வரையுங்கள். வலது புறம் பெரிதாய் + குறியிட்டு உங்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல விஷயங்களை எழுதுங்கள். இடது புறம் – குறியிட்டு உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளையும், தீமைகளையும் எழுதுங்கள். உண்மையாக ஆழமாக சிந்திப்பீர்களானால் கண்டிப்பாக வலது புறம் உள்ள பட்டியல் தான் நீண்டு இருக்கும். நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டக்காரர் என்பதை அப்போது தான் உங்களால் உணர முடியும்” என்று ஒரு சொற்பொழிவில் அவர் சொன்னதுடன் அனைவருக்கும் ஒரு வெள்ளைத் தாளைத் தந்து அப்போதே அப்படி எழுதிப் பார்க்கச் சொன்னார்.

அப்படி எழுதியவர்களில் பெரும்பாலானோருக்கு – குறியில் தான் எழுத நிறைய இருந்தது. ஒருசிலர் மட்டுமே + குறியில் நிறைய எழுதி இருந்தார்கள். அவர்களிடம் இப்போது இருக்கும் வாழ்க்கைக்கு இறைவனிடம் நன்றி சொல்லி விட்டுக் கிளம்பச் சொன்னார்.

மீதமுள்ளவர்களில் + குறியில் மிகக் குறைவாக எழுதியவர்களில் ஒருவரைத் தன்னிடம் வரச் சொன்னார். முத்து என்பவர் – குறியில் பெரிய பட்டியல் இட்டிருந்தார். ஆனால் + குறியில் எழுத ஒன்றுமே இல்லை என்று எதுவுமே எழுதாமல் இருந்ததால் அவரே அந்த அறிஞரிடம் போகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

அறிஞர் முத்துவிடம் இருந்து அந்தத் தாளை வாங்கிப் பார்த்தார். – குறியில் நுணுக்கி நுணுக்கி நிறைய எழுதி இருந்தார்.

அறிஞர் பேனாவை எடுத்துக் கொண்டு முத்துவிடம் கேட்டார். “உங்கள் மனைவி உங்களைப் பிரிந்து எவ்வளவு காலம் ஆகிறது?”

முத்துவிற்குக் கோபம் வந்து விட்டது. “என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து விட்டதாக யார் சொன்னது? என்னுடன் தான் இருக்கிறாள். நாங்கள் அன்பாகத் தான் இருக்கிறோம்’

அறிஞர் + பகுதியில் கொட்டை எழுத்தில் எழுதினார். “அன்பான மனைவி உடன் இருக்கிறாள்”

பின் முத்துவிடம் கேட்டார். “உங்கள் குழந்தைகள் எந்த ஜெயிலில் இருக்கிறார்கள்?”

அறிஞராக இருந்து கொண்டு இப்படி ஏடாகூடமாகக் கேட்கிறாரே என்று கோபத்துடன் நினைத்த முத்து சொன்னார். ”என் பிள்ளைகள் நல்லவர்கள். ஜெயிலுக்குப் போகிற அளவில் மோசமாய் இல்லை”

அறிஞர் + பகுதியில் அடுத்ததாக எழுதினார். “நல்ல பிள்ளைகள் இருக்கிறார்கள்”

பின் அறிஞர் கேட்டார். “உங்கள் வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதா?”

முத்து பொறுமையை இழந்தார். “மருந்து கண்டுபிடிக்காத வியாதி எல்லாம் எனக்கு இல்லை..”

அறிஞர் + பகுதியில் எழுதினார். “கொடிய வியாதி இல்லை”

இப்படியே முத்து சிறிதும் எதிர்பார்த்திருக்காத கேள்விகள் சிலவற்றைக் கேட்டு + பகுதியில் எழுதிக் கொண்டு போன அறிஞர் ஒரு கட்டத்தில் நிறுத்தி விட்டுச் சொன்னார். “இவை எல்லாம் சாதாரண நன்மைகள் அல்ல. இவற்றில் ஒன்று இல்லா விட்டாலும் நரக வாழ்க்கை அனுபவிக்க நேர்வது நிச்சயம். அப்படிப்பட்ட நல்ல விஷயங்கள் எல்லாம் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குத் தெரியாமலேயே இன்னும் நிறைய இருக்கின்றன. இத்தனைக்கும் சாதாரண நல்ல விஷயங்களுக்கு நான் இன்னும் போகவில்லை. அதெல்லாமும் கூட எழுத ஆரம்பித்தால் உங்களுக்கு + பகுதியில் எழுத இன்னும் பல பக்கங்கள் தேவைப்படும்....”

முத்து அங்கிருந்து போன போது புதிய மனிதராகப் போனார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றவர்கள் + பட்டியலும் அதிகரித்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

முத்துவைப் போலத் தான் பலரும் இருக்கிறோம். எத்தனையோ நன்மைகள் நம்மிடம் இருந்தாலும், நமக்கு நடந்திருந்தாலும் அவற்றை அங்கீகரிக்கக் கூட மறந்து விடுகிறோம். அதில் ஒன்றில் குறைபாடு சிறிது வந்தால் மட்டும் அந்தக் குறைபாட்டை வைத்துத் தான் அதைக் கவனிக்கிறோம். அது அப்போது மட்டுமே பெரிய விஷயமாகி விடுகிறது. இந்தக் குணம் தான் நம்முடைய சந்தோஷமின்மைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.


அடுத்தவரிடம் இருந்து, நம்மிடம் இல்லாத நன்மைகளைக் கவனித்து வருத்தப்படும் அளவுக்கு நாம் அடுத்தவரிடம் இல்லாத, நம்மிடம் இருக்கும் நன்மைகளைக் கவனிக்க முடிந்தால், நாம் எத்தனை பெரிய அதிர்ஷ்டசாலிகள் என்பதைக் கண்டிப்பாக உணர்வோம். உலகில் இருக்கின்ற பிரச்சினைகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாகக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அவற்றில் எத்தனை சிறிய சதவீதம் மட்டும் தான் நமக்கு உள்ளது என்பதும் நமக்குப் புரியும்.

- பட்டியல் அனைவரின் வாழ்க்கையிலும் இருக்கவே இருக்கிறது. அப்படி இல்லாத ஒருவர் இந்த பூமியில் இது வரை பிறந்ததில்லை. இனியும் பிறக்கப் போவதில்லை. எனவே அதற்கு விதிவிலக்காகும் ஆசை யாருக்கும் வேண்டியதில்லை. + பட்டியலை அறிந்திராமல் வாழ்க்கையில் எதுவுமே சரியில்லை என்ற கற்பனை அபிப்பிராயம் இல்லாமல் இருந்தால் போதுமானது.

இருக்கின்ற நன்மைகளைப் பார்க்கின்ற மனநிலை இல்லாததால் முத்துவின் அதிர்ஷ்டத்தை சுட்டிக் காட்ட அந்த அறிஞர் சில ஏடாகூடமான கேள்விகள் கேட்க வேண்டி வந்தது. நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையோடு பார்க்க முடிந்தால் அடுத்தவர் உதவி இல்லாமலேயே நம்மிடம் உள்ள நன்மைகளை நன்றியுடன் நம்மால் உணர முடியும்.

சரி, நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

புதன், 13 மார்ச், 2013

விளைவை மாற்ற செயலை மாற்றுங்கள்!


விளைவை மாற்ற செயலை மாற்றுங்கள்!

எதை விதைக்கிறோமோ அதைத் தான் அறுவடை செய்ய முடியும் என்பது விதி. துவரையை விதைத்து அவரை விளைச்சலை எதிர்பார்க்க முடியாது. தாவரவியலில் மட்டுமல்ல இந்த உண்மை மனிதனின் வாழ்வியலிலும் கூட மாற்ற முடியாத அடிப்படை விதியாக இருக்கிறது. எதையெல்லாம் செய்கிறோமோ அதற்கான விளைவுகளை நாம் சந்தித்தே ஆக வேண்டும்.

நம் முன்னோர்கள் இதை ‘கர்மா’ என்று சொல்வார்கள். நம் செயல்களின் விளைவு இந்தப் பிறவியில் அனுபவிக்கப்படா விட்டால் அடுத்த பிறவி வரை கூடத் தொடரும் என்றார்கள். உங்கள் நிழல் கூட இருட்டில் மறைந்து விடும். ஆனால் நீங்கள் செய்த செயல்களின் விளைவான கர்மா தன் பலனை அனுபவிக்கச் செய்யும் வரை என்றும் கூடவே வரும். அதனால் தான் பெரியோர்கள் ‘இறந்த பின்னும் கூடவே வருவது அவரவர் நல்லது, கெட்டது தான்” என்பார்கள்.

விதைகளின் தன்மை விளைச்சலில் தெரிவது போல செயல்களின் தன்மை அதன் விளைவுகளில் தெரியும். நடும் போது யாரும் பார்க்கவில்லையே என்று ஒருவன் கோணல் மாணலாக நாற்றுகளை நடலாம். ஆனால் அவை வளர்ந்த பின் என்ன நட்டிருக்கிறீர்கள் என்பதையும் எப்படி நட்டிருக்கிறீர்கள் என்பதை உலகிற்குக் காட்டாமல் விடாது. அதனால் தவிர்க்க முடியாத இந்த விதிக்கு விதிவிலக்காக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள். அப்படி நடக்க வாய்பேயில்லை. ஏனென்றால் இந்த அடிப்படை விதியிலேயே உலகம் அன்றிலிருந்து இன்று வரை இயங்குகிறது. இந்த விதியே இயற்கை. இந்த விதியே இறைவன்.

எனவே நன்மைகளை தன் வாழ்க்கையில் சந்திக்க விரும்பும் மனிதன் தன் செயல்களில் நன்மை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தீமைகளைச் செய்து விட்டு தனக்கு நன்மை நடக்கும் என்று நம்புபவன் கிழக்கு திசையில் உள்ள ஊருக்குச் செல்ல ஆசைப்பட்டு மேற்கு திசை நோக்கி நடக்கும் முட்டாளுக்கு இணையாகிறான்.

எல்லா அக்கிரமங்களையும் செய்து விட்டு கங்கையில் மூழ்கினாலும் பாவத்தைக் கழுவி விட முடியாது. உங்கள் செயல்களைக் கண்டு கொள்ளாமல் இருக்க இறைவன் மாமூல் வாங்கும் அரசு அதிகாரி அல்ல. ஆகையால் கோயில் உண்டியல்களில் கோடி கோடியாய் கொட்டினாலும் உங்கள் கணக்கு சரியாகி விடாது. உங்கள் கணக்கு சரியாவது அதற்குத் தகுந்த விளைவோடு தான்.

சில சமயங்களில் நல்ல செயல்களுக்கு நல்ல விளைவுகளும், தீய செயல்களுக்கு தீய விளைவுகளும் கிடைப்பதற்குத் தாமதமாகலாம். அந்த தாமத காலத்தில் இந்த விதி பொய்ப்பது போன்ற தோற்றம் பலருக்கும் தோன்றலாம். ஆனால் தாமதமானாலும் விளைவுகள் வட்டியோடு வந்து சேரும் என்பதில் சந்தேகம் தேவையில்லை.

இடைவெளி எவ்வளவாக இருந்தாலும் செயலும் விளைவும் பிரிக்க முடியாத ஜோடி என்பதால் ஒன்றின் பின்னாலேயே மற்றது வந்து சேர்ந்து தானாக வேண்டும்.

எனவே விளைவுகளை மாற்ற விரும்பினால் மனிதன் செயல்களை மாற்ற வேண்டும். அதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை. இந்த விதி நன்மை, தீமைகளுக்கு மட்டும் பொருந்துவது அல்ல. செயலின் சிறப்புத் தன்மைக்கும் இதே விதி தான்.

விளைவைப் பார்க்கையிலேயே அந்த செயல் எப்படி செய்யப்பட்டு இருக்கிறது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிந்து விடும். கவனமாகச் செய்தீர்களா, ஈடுபாட்டுடன் செய்தீர்களா, முழு மனதோடு செய்தீர்களா, அந்த செயலுக்குத் தேவையான அறிவுபூர்வமாகச் செய்தீர்களா என்பதை எல்லாம் நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் செயலின் விளைவு சொல்லி விடும்.

விளைவைப் ’போஸ்ட் மார்ட்டம்’ செய்தால் சின்னத் தவறு கூட இல்லாமல் செயல் செய்த விதத்தைச் சொல்லி விடலாம். சிறப்பாகச் செய்யும் செயல்கள் சிறப்பான விளைவுகளாக மலர்ந்து வாழ்க்கையை சோபிக்கும். வேண்டா வெறுப்பாகவோ, திறமைக் குறைவாகவோ செய்யும் செயல்கள் அதற்குத் தகுந்தாற் போல மோசமான விளைவுகளாக வெளிப்பட்டு களையிழந்து காட்சி அளிக்கும்.

இந்த அடிப்படை உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் பலர் காலம் முழுவதும் கஷ்டப்படுகிறார்கள். ’நான் என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் முன்னேற்றமில்லை’ என்று பலர் புலம்புவதை நாம் கேட்கிறோம். குறிப்பட்ட வகையில் எத்தனை உழைத்தாலும் முன்னேற்றமில்லை என்றால் அந்த உழைப்பில், உழைக்கும் விதத்தில் ஏதோ குறைபாடு இருக்கிறது என்றல்லவா அர்த்தம்.

அப்படி இருக்கையில் அப்படியே தொடர்ந்து உழைத்துக் கொண்டு போவது முட்டாள்தனம் அல்லவா? எங்கே என்ன தவறு இருக்கிறது அல்லது என்ன குறைபாடு இருக்கிறது என்று கண்டுபிடித்து அதன்படி சரி செய்து கொண்டு உழைத்தாலல்லவா நாம் நல்ல விளைவுகளைக் காண முடியும். இந்த அடிப்படை உண்மையை வாழ்க்கையில் உணர பலரும் மறப்பது தான் பரிதாபம்.

செய்கின்ற வேலையில் முன் யோசனையும், திட்டமிடுதலும், தேவையான திறமையும் இருந்தால் அந்த வேலை சீக்கிரமாக முடியும், சிறப்பாகவும் முடியும். ஆனால் உழைப்பு மட்டும் இருந்து முன் சொன்ன மூன்றும் இல்லா விட்டால் வேலையும் முடியாது, வேலை சிறப்பாகவும் இருக்காது. வேலை எதுவாக இருந்தாலும் விதி இது தான்.

செயலின் முடிவே விளைவு என்ற உண்மையே மிகப்பெரிய பாடம் என்று சொல்லலாம். இப்போது இருக்கும் நிலைமையில் உங்களுக்குத் திருப்தி இல்லையா? நீங்கள் அடைய நினைத்த வெற்றிகளை அடையவில்லையா? உலகம் உங்களை சரியாக மதிப்பிடவில்லை என்ற வருத்தமா? இதில் எதற்காவது ஆம் என்பது பதிலாக இருந்தால் முதலில் உங்களுடைய செயல்பாடுகளை ஆராய்ந்து பாருங்கள்.

செயல்படும் முறையிலும், செயல்படும் நேரத்திலும் குறைபாடுகள் இருக்கலாம். அல்லது செய்ய வேண்டிய ஏதோ முக்கியமானது விடுபட்டுப் போயிருக்கலாம். செய்யக் கூடாத ஏதோ ஒன்றை நீங்கள் செய்து கொண்டும் இருக்கலாம். சரியான கூட்டல், கழித்தலை உங்கள் செயல்களில் புகுத்தினால் கண்டிப்பாக விளைவுகள் மாற ஆரம்பிப்பதைப் பார்க்கலாம். அதை விட்டு விட்டு வருந்துவதும், குமுறுவதும், புலம்புவதும் மாற்றத்திற்கு உதவாது.

இப்படித்தான் இருப்பேன், இப்படித்தான் வேலை செய்வேன், இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று சொல்பவன் தோற்கத் தன்னைத் தயார் செய்து கொள்கிறான். செயலின் விளைவு எதிர்பாராததாக இருந்தால் ஏன் என்று சிந்தித்து மாற்ற வேண்டியதை மாற்றி விட்டு மறுபடி செயல்பட வேண்டும்.

அவ்வப்போது நம்மை சரி செய்து கொண்டே இருப்பது தான் உண்மையான முன்னேற்றத்திற்கு உதவும். அதுவே நம் வாழ்க்கையை மெருகுபடுத்திக் கொண்டே செல்லும். எல்லா மகத்தான மனிதர்களும், எல்லா வெற்றியாளர்களும், தாங்கள் வேண்டும் விளைவுகளுக்கேற்ப தங்கள் செயல்களை சரிப்படுத்திக் கொண்டே வந்தவர்கள் தான்.

உலகம் அவர்களை அதிர்ஷ்டக்காரர்கள் என்று சுருக்கமாக அழைத்தாலும் சரியான நேரத்தை, சரியானதை, சரியான விதத்தில் செய்தது தான் அந்த அதிர்ஷ்டத்தின் ரகசியம்.
இதுவே வாழ்க்கையில் படிக்க வேண்டிய மிகப்பெரிய பாடம். இதில் தேர்ச்சி பெற்றால் ஒருவன் சாதிக்க முடியாத இலக்குகள் இல்லை, அடைய முடியாத சிகரங்களும் இல்லை.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

உனக்கு நீயே நண்பனும், பகைவனும்!


உனக்கு நீயே நண்பனும், பகைவனும்!

தியான யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொல்வது மிக உயர்ந்த அறிவுரை. அது

தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். தன்னை எப்போதும் இழிவுபடுத்திக் கொள்ளக் கூடாது. தனக்குத் தானே நண்பன். தனக்குத் தானே பகைவன்.

தன்னை வசப்படுத்திக் கொண்டவனுக்கு தானே நண்பன். தன்னை வசப்படுத்திக் கொள்ளாதவனுக்கு தானே சத்ருவாகி தனக்குக் கேட்டை உண்டாக்கிக் கொள்கிறான்.

ஒவ்வொருவருக்கும் மிக உயர்ந்த நிலைக்குப் போக இயல்பாகவே ஆசை இருக்கிறது. ஆனால் பெரும்பாலானோரும் அதை யாராவது தங்களுக்காக செய்து தர ஆசைப்படுகிறார்கள்.

கடவுளோ, குருவோ, தலைவனோ, நண்பனோ, அல்லது வேறு யாராவது செய்து தந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படுகிறார்கள்.

இப்படி உயர்ந்த நிலைக்குப் போகும் பொறுப்பை அடுத்தவர் தலையில் கட்டுவது ஒருவர் தாழ்ந்த நிலையிலேயே தங்கி விடுவதற்கு நிரந்தரக் காரணமாகி விடுகிறது.

எனவே தான் தன்னை உயர்த்திக் கொள்ளும் பொறுப்பு அவரவருக்கே உள்ளது என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

நான் பலவீனமானவன், சக்தியற்றவன், என்னால் இதெல்லாம் முடியாது, அதெல்லாம் முடியாது என்பதெல்லாம் தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொள்ளும் வழிகள். தன்னைக் குறைத்துக் கொண்டு யாரும் உயர முடியாது என்பதால் அதை எப்போதும் செய்யக் கூடாது என்று அறிவுறுத்துகிறார்.

ஒரு சிறு விதை நான் எப்படி பெரிய மரமாகப் போகிறேன் என்று தன்னை இழிவாக நினைத்துக் கொள்வதில் அர்த்தமில்லை.

அது தளிராகி, செடியாகி, மரமாகத் தேவையான எல்லாமே காலா காலங்களில் கிடைக்கும். கிடைப்பதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அது தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். அது தான் முறை. அது தான் இயற்கையான வளர்ச்சி. அது தன் ஆரம்ப நிலையில் தாழ்வு மனப்பான்மை கொண்டு தன்னை இழிவாக நினைத்துக் கொண்டு வருத்தத்தில் இருந்து விட்டால் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு உயரும் நம்பிக்கையையும், தெம்பையும் இழந்து விட்டு அழிந்து தான் போகும்.

இது மனிதனுக்கும் முற்றிலும் பொருந்தும். இலக்கை அடையும் ஆவலை இயற்கையாகவே அவனிடம் ஏற்படுத்திய இறைவன் அதை நிறைவேற்றிக் கொள்ளும் சக்தியையும், சந்தர்ப்பங்களையும் அவனுக்கு ஏற்படுத்தித் தராமல் இல்லை. எது நல்லது எது கெட்டது என்றும், இலக்கை அடைய எது தேவை, எது தேவையில்லை என்றும் பகுத்தறியும் அறிவும் அவனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அப்படி இருந்தும் அவன் அதற்கேற்றாற் போல தன் மனதும், நடவடிக்கைகளும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளா விட்டால் அவன் தன்வசமில்லை என்று பொருள். உயர வேண்டும் என்ற நோக்கமும் இருந்து, அதற்கான வழியும் தெரிந்து,

அதன் படி அவனால் நடக்க முடியவில்லை என்பதால் அவனுக்கு அவனே பகைவன் ஆகி விடுகிறான். அதனால் அவன் இலக்கு ஒரு கற்பனையாகவே இருந்து விடும். அது மட்டுமல்ல ஆரம்பித்த இடத்தில் கூட நிற்க முடியாமல் தன் முட்டாள்தனமான செயல்களால் அதல பாதாளத்திற்குத் தள்ளப்படுகிறான்.

இது அவன் அவன் தவறுகளுக்கான தண்டனை இல்லை. யாரோ எங்கோ அமர்ந்து தீர்ப்பு வழங்குவதில்லை. தண்டிப்பதில்லை.

சுவாமி ராமதீர்த்தர் மிக அழகாகச் சொல்வார். “மனிதன் தவறுகளாலேயே தண்டிக்கப்படுகிறான். தவறுகளுக்காகத் தண்டிக்கப் படுக்கப்படுவதில்லை”.

இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் கடலளவு பெரிது. அந்தத் தவறுகள் தங்கள் இயல்பான விளைவுகளிலேயே வந்து முடிகிறது. அது தண்டனையாகத் தோன்றினாலும் மனிதனை வேறு யாரும் தண்டிப்பதில்லை. அவன் தன் செயல்களால் தன்னையே தண்டித்துக் கொள்கிறான் என்பதே உண்மை.

உயர வேண்டும், இலக்கை அடைய வேண்டும் என்று நோக்கம் இருந்து அதற்கான வழிகளை அறிந்து அதற்கேற்றாற் போல் தன் வாழ்வின் ஒவ்வொரு கணமும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும் மனிதன் வழிமாறிப் பயணிப்பதில்லை.

தேவையற்றவற்றில் ஈடுபட்டு அவசியமானவற்றை புறக்கணித்து விடுவதில்லை. எது அவன் முன்னேற்றத்திற்கு உதவாதோ அதை ஆரம்பத்திலேயே தள்ளி விட்டு அவசியங்களில் மட்டும் மனதை நிறுத்தி செயல்களும் அது சார்ந்தே இருக்கும்படி பார்த்துக் கொள்கிறான். அவன் தன்னை வசப்படுத்திக் கொண்டவன். அதனால் அவன் தனக்கு நண்பனாகவே செயல்படுகிறான். அவன் உயரவும் செய்கிறான்.

எனவே தான் ஸ்ரீகிருஷ்ணர் தனக்குத் தானே நண்பன் என்றும் தனக்குத் தானே பகைவன் என்றும் உறுதியாகக் கூறுகிறார். எனவே நாம் காரணங்களை வெளியே தேட வேண்டியதில்லை.

புறநானூறும் மிக அழகாகச் சொல்கிறது. “தீதும் நன்றும் பிறர் தர வாரா”. எனவே லௌகீகம் ஆகட்டும், ஆன்மிகம் ஆகட்டும், வெற்றி பெறவும், கடைத் தேறவும் மனிதன் முதலில் தன்னையே சரி செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. அவன் சரியானால் பின் அவனுக்கு உலகமே சரியாகி விடும்.

வியாழன், 21 பிப்ரவரி, 2013

அலட்சியத்தின் விலை அதிகம்

அலட்சியத்தின் விலை அதிகம்

அலட்சியம் என்றும் எதையும் சாதித்ததில்லை. 

அது மாபெரும் நூல்களை எழுதியதில்லை. மனதை மயக்கும் இசையை இசைத்ததில்லை. உயர்ந்த ஓவியங்களை வரைந்ததில்லை. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்ததில்லை. நாலு பேருக்கு நன்மை பயக்கும் செயல்களைச் செய்ததில்லை. வீரதீர பராக்கிரமங்களை நிகழ்த்தியதில்லை. மேன்மைக்குரிய இந்த செயல்கள் எல்லாம் உற்சாகத்தினாலும், ஊக்கத்தாலும் இதயபூர்வமாக செய்யப்பட்டவை. லட்சியத்தின் வெளிப்பாடுகள்.

அலட்சியம் எதையும் முக்கியம் என்று நினைப்பதில்லை. புதியதாக முயற்சிகள் எடுப்பதில்லை. எதிலும் சீரிய கவனம் வைப்பதில்லை. எண்ணங்களையும், செயல்களையும் ஒழுங்குபடுத்திக் கொள்வதில்லை. திட்டமிடுவதிலை. கஷ்டப்பட்டு உழைக்கத் தயாராவதில்லை. குறிக்கோள் வைத்துக் கொள்வதில்லை. உற்சாகம் கொள்வதில்லை. ஆனால் சாதனைகளும் சரித்திரங்களும் இதற்கு எதிர்மறையான குணங்களினாலாயே சாத்தியமாகின்றன.

ஒரு வயல்வெளியைப் பாருங்கள். உழுது, பயிரிட்டு, கதிர்கள் அரும்பி நிற்கும் அந்த அழகுக் காட்சி ஒரு லட்சியத்தின் விளைவு. அதில் ஒரு திட்டமுண்டு. காலம் பார்த்து முறைப்படி செய்த உழைப்புண்டு. அதில் ஒரு பயனுண்டு. அந்த வயல்நிலம் இலட்சியத்தின் விளைவு.

முள்களும், பார்த்தீனியமும், சகட்டுமேனிக்கு வளர்ந்து ப்ளாஸ்டிக் காகிதங்கள் சிக்கிக் கொண்டு இருக்கும் ஒரு கண்காணிக்கப்படாத நிலத்தைப் பாருங்கள். அதில் குறிக்கோளும் இல்லை. எந்த மனித முயற்சியும் இல்லை. எல்லாம் தானாக வளர்ந்தது. தானாக வந்து சிக்கியது. அதனால் எந்தப் பயனும் இல்லை. அந்தப் பாழ்நிலம் அலட்சியத்தின் விளைவு.

எது எக்கேடோ கெட்டுப் போனால் எனக்கென்ன என்பது அலட்சியம். தானாக எது நடந்தாலும் சரி என்று இருப்பது அலட்சியம். முக்கியமான முடிவுகளைத் தானாக எடுக்காமல் இருப்பது அலட்சியம். போகின்ற வழி எது என்று அறியாதிருப்பது அலட்சியம். தன் வாழ்க்கைக்குத் தானே பொறுப்பு எடுக்காமல் இருப்பது அலட்சியம்.

எதையும் லட்சியம் செய்யாமல் வாழ்பவர்கள் யாரும் லட்சியம் செய்யாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். வாழ்க்கையின் உண்மையான சந்தோஷத்தை அறியாமலேயே, வாழ்ந்த சுவடு தெரியாமலேயே மறைந்து போவார்கள். வாழ்க்கையில் முக்கியமான அம்சங்களில் காட்டும் அலட்சியத்திற்கு மனிதர்கள் தரும் விலை மிக அதிகம்.

'அன்னியன்' திரைப்படத்தில் சமூக அலட்சியம் பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள். அந்தப் படத்தின் கதாநாயகன் அலட்சியக்காரர்கள் ஒவ்வொருவரையும் கருட புராணத்தில் சொல்லியிருக்கும் சித்திரவதைக்கு உள்ளாக்குவான். அது கற்பனை. அது போல மனிதன் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் அலட்சியமாக இருந்து விட்டால் வேறு ஒரு நபர் வந்து தண்டிப்பதில்லை. மோசமான விளைவுகளை சந்தித்து தன்னைத் தானே தண்டித்துக் கொள்கிறான். எனவே வாழ்க்கையில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

திங்கள், 11 பிப்ரவரி, 2013

வாழ்க்கையில் ஒரு சவால்

வாழ்க்கையில் ஒரு சவால்...

சிலர் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும் பிறப்பதே அதற்காகத் தான் என்று நம்புகிறார்கள். சிலரோ வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் அது தான் அர்த்தமுள்ள வாழ்க்கை என்று சிந்திக்கிறார்கள். இதில் எது சரி என்ற கேள்விக்கு சரியான விடையை அவரவர் மனநிலைக்குத் தகுந்தபடி நாம் எடுத்துக் கொள்கிறோம்.

இந்தக் கேள்விக்கு அழகான பதில் ஒன்று சமீபத்தில் நான் படித்த நாவலில் எனக்குக் கிடைத்தது. அந்த நாவல் Paulo Coelho எழுதிய The Alchemist.

அந்த நாவலில் கதாநாயகன் தன் பிரயாணத்தின் வழியில் உள்ள ஒரு ஊரில் ஒரு சித்தரைப் போன்ற மனிதரைச் சந்திக்கிறான். அந்த மனிதர் ஒரு டீ ஸ்பூனை அவனிடம் கொடுத்து அதில் இரண்டு சொட்டு எண்ணையையும் ஊற்றி அந்த எண்ணெய் சிந்தி விடாதபடி அந்த ஸ்பூனை எடுத்துக் கொண்டு ஊரைச் சுற்றி வரச் சொன்னார். கதாநாயகன் அப்படியே கவனமாக அந்த ஸ்பூனுடன் சென்று ஊரைச் சுற்றி வருகிறான்.

அவர் அந்த ஸ்பூனில் எண்ணெய் அப்படியே இருப்பதைப் பார்த்து விட்டு அவனிடம் ஊரில் உள்ள அழகான சில இடங்களின் பேரைச் சொல்லி அதையெல்லாம் ரசித்துப் பார்த்தாயா என்று கேட்கிறார். கதாநாயகன் தன்னால் அதையெல்லாம் சரியாகப் பார்க்க முடியவில்லை என்றும் தன் கவனமெல்லாம் எண்ணெய் சிந்தி விடாமல் இருக்க வேண்டும் என்பதிலேயே இருந்தது என்றும் சொல்கிறான்.

அந்த மனிதர் திரும்பவும் அந்த ஸ்பூனுடன் சென்று அந்த இடங்களை எல்லாம் நன்றாகக் கண்டு களித்து வரச் சொல்கிறார். அவனும் சென்று அவர் சொன்ன இடங்களை எல்லாம் நன்றாக ரசித்து விட்டு வருகிறான். உற்சாகமாகத் தான் கண்டு களித்த இடங்களின் அழகை வர்ணிக்கிறான்.

அதையெல்லாம் கேட்டு விட்டு அந்தப் பெரியவர் அமைதியாகக் கேட்கிறார். "சரி நான் கொடுத்த எண்ணெய் எங்கே?"

அப்போது தான் அந்த ஸ்பூனில் எண்ணெய் இல்லாததை அவன் கவனிக்கிறான்.

அந்த மனிதர் அந்தக் கதாநாயகனுக்குச் சொல்லும் அறிவுரை பொருள் பொதிந்தது.

"Well, there is only one piece of advice I can give you," said the wisest of wise men. "The secret of happiness is to see all the marvels of the world, and never to forget the drops of oil on the spoon".

அந்த மனிதர் அந்த நாவலின் கதாநாயகனை அனுப்பியது போல் தான் கடவுளும் நமக்கு ஏதாவது ஒரு குறிக்கோள் என்ற எண்ணெயைக் கொடுத்து வாழ்க்கையை நன்றாக அனுபவித்தும் வர இந்த உலகத்திற்கு நம்மை அனுப்பியிருக்கிறார். இந்த இரண்டில் ஒன்று நிறைவேறா விட்டாலும் நாம் உண்மையான சந்தோஷத்தையும் நிறைவையும் இந்த வாழ்க்கையில் பெற முடியாது. நல்லபடியாக வாழ்க்கையை ரசித்து வாழ்வோம். அதே நேரத்தில் அர்த்தமுள்ள குறிக்கோளில் இருந்து நமது கவனம் எந்தக் கணத்திலும் சிதறி விடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வோம்.

இனியொரு வாழ்க்கை நமக்கு இருக்குமா, இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று நமக்கு நிச்சயமில்லை. ஆகவே கிடைத்த இந்த வாழ்க்கையில் அர்த்தத்தையும், ஆனந்தத்தையும் இழந்து விடாமல் பார்த்துக் கொள்வோம்.

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

நீரின்றி அமையாது உலகு

நீரின்றி அமையாது உலகு - இயற்கையை பாதுகாத்து வந்த தமிழன். இன்றைய நிலை என்ன ?

தண்ணீரில் இருக்கும் கனிமங்களின் அளவை டி.டி.எஸ். (Total dissolved solids) என்பார்கள். ஒரு லிட்டர் தண்ணீரில் டி.டி.எஸ் - ஸின் அளவு 300 புள்ளிகளுக்குள் இருந்தால் மட்டுமே அது குடிக்க உகந்த நீர். ஆனால், இன்று தமிழகத் தின் பெரும்பாலான மாவட்டங்களில் பொதுமக்கள் குடிக்கும் குடிநீரில் டி.டி.எஸ் - ஸின் அளவு 3,000-தைத் தாண்டிவிட்டது'' - சமீபத்தில் 'பூவுலகின் நண்பர்கள்அமைப்பினர் மற்றும் லயோலா கல்லூரியின் என்விரோ கிளப் இணைந்து 'முந்நீர் விழவுஎன்ற பெயரில் நடத்திய தண்ணீர்பற்றிய பண்பாட்டு, அரசியல் கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப்பட்ட அதிர்ச்சிப் புள்ளிவிவரம் இது.

ஆற்று நீர், கடல் நீர், குடிநீர் - இந்த மூன்றுவிதத் தண்ணீரின் வளத்தையும் வணிக நோக்கில் மனிதன் எவ்வாறு எல்லாம் சூறை யாடுகிறான் என்பதைப் பற்றி அந்த நிகழ்ச்சி யில் பகிர்ந்துகொள்ளப்பட்ட பல தகவல்கள் பகீர் திகீர் ரகம்.

கடல் நீரின் மாசு குறித்து ஆவேசமும் ஆதங்கமுமாக விவரித்தார் பேராசிரியர் லால்மோகன். ''கருங்கடல், காஸ்பியன் கடல் போன்றவை அடர்த்தி மிகுந்தவை. அங்கு உயிரினங்கள் மிகக் குறைவு. அதில் மீன்கள் இருந்தாலும் அவற்றை அந்தக் கடல் சார்ந்த தேசத்தினர் சாப்பிடுவது கிடையாது. அந்த கடல்களின் நிலை மற்ற கடல்களுக்கும் வந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. இந்த ஆண்டு ஆறு லட்சம் டன் பெட்ரோல் கடலில் சிந்தி இருக்கிறது. டன் கணக்கில் நிலக்கரியும் ஆலைக் கழிவு நீரும் பிளாஸ்டிக் கழிவுகளும் கடலில் கலக்கின்றன. அணு மின் நிலையங்கள் வெளியேற்றும் வெப்பக் கழிவு நீரால் கடலின் அந்தப் பகுதியில் இருந்து மீன்கள் வெளியேறிவிடும். மீன்கள் வெளியேறினால் மீனவனும் வெளி யேற வேண்டியதுதான். இன்று இந்தியா ஆண்டு ஒன்றுக்கு நான்கு மில்லியன் மெட்ரிக் டன் கடல் உணவை அறுவடை செய்கிறது. முந்தைய அளவை ஒப்பிட்டால், இது பாதி தான். உற்பத்தியின் அளவு மட்டும் அல்ல... இன்று மீனவர்கள் பிடிக்கும் வஞ்சிரம், சுறா, சாளை, சங்கரா போன்ற மீன்களின் உருவ அளவும் பாதியாகக் குறைந்துவிட்டது!'' என்றார்.

கடல் ஆராய்ச்சியாளரான ஒடிசா பாலு, கடலுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பந்தத்தை விளக்கினார். ''கன்னியாகுமரி கடல் பகுதியை லட்சத்தீவு கடல் என்கிறார் கள். உண்மையில் அதை குமரிக் கடல் என்றுதான் அழைக்க வேண்டும். ஏனெனில், கன்னியாகுமரி கடலில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு அழிந்துபோன சங்கத் தமிழ் நகரங்களின் எச்சங்களும் மலைத் தொடர்களும் மூழ்கிக்கிடக்கின்றன. இந்த இடிபாட்டுப் பகுதிகள் சுறாக்கள் இனப் பெருக்கம் செய்ய உகந்தவை. கடலில் உள்ள நீரோட்டங்களை நன்கு அறிந்தவை ஆமை கள். செயற்கைக்கோள் உதவியுடன் ஆமை களை ஆராய்ந்ததில் ஓர் உண்மை தெரிந்தது. ஆமைகள் தமிழகக் கடலில் பாயும் நீரோட் டங்களின் வழியே நீந்தாமல் மிதந்து சென்றே பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து பல்வேறு நாடுகளைச் சென்றடைகின்றன. இது இன்று, நேற்று நடப்பதல்ல. 65 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசருக்கு இணையான மூதாதையரான இந்த ஆமை கள், காலம் காலமாக இப்படித்தான் கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களை முட்டையிட தேடிச் செல்கின்றன. ஆமைகள் அப்படிச் செல்லும்போது அதனைப் பின் தொடர்ந்து சென்று கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களைக் கண்டுபிடித்து தொழிலை யும் நாகரிகத்தையும் உலகில் முதன்முதலில் வளர்த்தது தமிழர்களே. இன்றும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 1,300 தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. உலகெங்கும் உள்ள ஊர்களில் தமிழ் வாசம் வீசுகிறது. அவை எல்லாம் தமிழர்கள் ஆமையைப் பின்பற்றிச் சென்று கடல் வழி நீரோட்டப் பயணங்கள் மூலம் நிலங்களைக் கண்டடைந்ததன் விளைவுகள். ஆனால், இன்று அந்த ஆமைகளைப் பெருமளவு அழித்துவிட்டோம். கடலின் நீரோட்டங் களில் பல்வேறு வண்ணங்களில் அடித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளை ஜெல்லி மீன்கள் என்று நினைத்துச் சாப்பிடும் ஆமைகள் இறந்துபோகின்றன.

சென்னையில் அடையாறு, கூவம், முட்டுக்காடு, எண்ணூர் உட்பட தமிழகத்தில் 33 முகத்துவாரங்கள் இருக்கின்றன. இவைதான் சுனாமியில் இருந்து தமிழகத்தைக் காக்கும் மிகப் பெரிய அரண்கள். இந்த முகத்துவாரங்கள் வேகமாக வரும் கடல் நீரை உள்வாங்கி அலைகளைச் சாந்தப்படுத்தி மீண்டும் கடலுக்குள் கொண்டுசென்றுவிடுகின்ற பணியைச் செய்கின்றன. ஆனால், இன்று அத்தனை முகத்துவாரங்களையும் சேதப்படுத்திவிட்டு, கற்களைக் கொட்டி கடல் அலையைத் தடுக்க முற்படுகிறோம். கல்லைக் கொட்டி எல்லாம் கடல் அலைகளைத் தணிக்க முடியாது!'' என்று முடித்தார்.

ஆற்று நீரைப் பற்றி பேராசிரியர் ஜனகராஜன் சொல்லும் தகவல் அதிர்ச்சியின் உச்சம். ''தமிழகத்தில் காவிரி, பாலாறு, வைகை உட்பட 17 நீர்ப் பிடிப்புப் பகுதிகள் இருக்கின்றன. இவை இல்லையெனில், தமிழகம் பாலையாகிவிடும். ஆனால், காவிரி தொடங்கி பாலாறு வரை தோல் தொழிற்சாலைகள், சாயப் பட்டறைத் தொழிற்சாலைகள் ஆற்றை விஷமாக்கி வருகின்றன. பாலாற்றங்கரையில் மட்டும் சுமார் 800 தொழிற்சாலைகள் இருக்கின்றன. இவை வெளியிடும் குரோமியம் கழிவு நீர் கலந்த குடிநீரைத்தான் சென்னையின் பாதி மக்கள் குடிக்கிறார்கள். பாலாறு பகுதியில் இருக்கும் 46 ஊர்களில் 27,800 கிணறுகளின் தண்ணீரை உபயோகிக்கவே முடியவில்லை. கிணற்றை எட்டிப் பார்த்தாலே ரசாயன நெடி தாக்குகிறது. உலகிலேயே மிகவும் மாசு பட்ட நதி என்று குளோபல் மேப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பது பாலாறு மட்டுமே. இதை நம்ப மறுப்பவர்கள் பாலாற்றின் வறண்ட பகுதியைப் போய்ப் பாருங்கள். நமக்குச் சோறிட்ட அந்தத் தாயின் உடல் முழுவதும் நீலம் நீலமாக ரசாயனத்தால் பூத்துக்கிடக்கிறது.

தோல் தொழிற்சாலைகளால் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி வருகிறது என்கிறது அரசு. உண்மைதான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு அவ்வளவு தோல் பொருட்கள் ஏற்றுமதி ஆகின்றன. ஏன்? அமெரிக்கா, ஐரோப்பாவில் கால் நடைகள் இல்லையா? அந்த நாடுகளுக்குத் தோல் பொருட்களைத் தயாரிக்கத் தெரியாதா? தெரியும். ஆனால், செய்ய மாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரை இது டர்ட்டி இண்டஸ்ட்ரி!'' என்கிறார் கோபத்துடன்!

குடிநீரைப் பற்றிப் பேசிய பேராசிரியர் சரவண பாபு கூறியது கவனிக்கத்தக்கது. ''15 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தடி நீரை எடுக்க நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. மினரல் வாட்டர் நிறுவனங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை நாள் ஒன்றுக்குக் குறிப்பிட்ட அளவு மட்டுமே நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க முடியும். தவிர, தனியாக இன்னொரு போர்வெல் போட்டு மழை நீர் மற்றும் பயன்படுத்தப்பட்ட தீங்கு இல்லாத நீரைச் சேகரித்து மீண்டும் பூமிக்குள் செலுத்த வேண்டும். வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் போர்வெல் போட வேண்டும் என்றால், அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அந்தச் சட்டம் காலப்போக்கில் நீர்த்துவிட்டது. மினரல் வாட்டர் நிறுவனங்கள் தாங்கள் குறிப்பிட்ட அளவு தண்ணீரை பூமிக்குள் மீண்டும் செலுத்து வதாகச் சொல்கின்றன. உண்மையில், சுத்திகரிக்கப் பட்ட பின்பு கிடைக்கும் கழிவு நீரைத்தான் அவை பூமிக்குள் செலுத்துகின்றன. அதில்தான் டி.டி.எஸ். அளவு இன்னும் மிக அதிகமாக இருக்கும்.

நாம் குடிக்கும் ஒரு லிட்டர் குடிநீரில் நைட்ரேட் 20 மில்லி கிராம், துத்தநாகம், ஃப்ளோரைடு தலா ஒரு மில்லி கிராம், சோடியம் 20 மில்லி கிராம் அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால், இன்று தமிழகத்தில் பரவலாக நாம் குடிக்கும் ஒரு லிட்டர் தண்ணீரில் மேற்கண்ட அளவைவிட மூன்று மடங்கு கூடுதலாக ரசாயனக் கனிமங்கள் இருக்கின்றன. இதனால் சுவாச நோய், மன நோய், ரத்த சோகை, பற்களில் கறை, எலும்பு நோய்கள், சிறுநீரகக் கற்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடனடியாக தமிழகம் சுதாரிக்க வேண்டிய சூழல் இது!'' என்று எச்சரித்தார்.

இயற்கை விவசாயத்தில் மாற்றுப் பாதையை முன்னெடுக்கும் பாமயன் இறுதியாகக் கூறியது முத்தாய்ப்பான உண்மை. ''பூமியை ஓர் உயிரினம் என்பார்கள். செயற்கைக்கோளில் இருந்து பார்த்தால், பூமி மூச்சுவிட்டுக்கொண்டு மெலிதாக அசைவதுபோலத் தெரியும். அந்த உயிரினம் வேகமாகக் கொலை செய்யப்பட்டுவருகிறது. இதற்கு மேலும் அதை அழிக்க முற்படாதீர் கள். மீறினால் அந்த உயிரினம் மனித குலத்தை அழித்துவிடும்!''
Top of Form